புலமைக்குச் சோதனை
அம்பிகாபதி அமராவதி காதல் விவகாரம் நாளடைவில் அம்பலமானது. குலோத்துங்க சோழ மன்னன் விவரமறிந்து அளவிலாக் கோபமுற்றான். ஒட்டக்கூத்தர் அம்பிகாபதி தண்டனை பெற வேண்டுமென்பதில் முனைப்பாக இருந்ததால் அரசனிடம் அவனது கோபத்தை மேலும் அதிகப்படுத்தும் விதமாகப் பல சட்டதிட்டங்கள், சம்பிரதாயங்கள் முதலியவற்றை எடுத்துக்கூறி நிலைமையை மிகவும் தீவிரமடையச் செய்தார். கம்பரின் வேண்டுதல்கள் எதுவும் மன்னனின் செவியில் ஏறவில்லை. முடிவாக அம்பிகாபதிக்கு ஒரு சோதனை நடத்தி அவன் அதில் வெற்றி பெற்றால் அமராவதியை மணக்கலாம் என்றும், தோலி்யுற்றால் மரண தண்டனை எனவும் முடிவு செய்யப்பட்டது. சோதனை என்னவெனில், ஒரே நாளில், குறிப்பிட்ட நேரரத்துக்குள் சபையோர் முன்னிலையில் நூறு பாடல்களை அம்பிகாபதி தொடர்ந்து இயற்றி அரங்கேற்ற வேண்டும். அற்றில் காமரசம் துளியும் இருக்கக்கூடது. அப்பாடல்களில் பிழை ஏற்பட்டாலோ, காமரசம் கலந்தாலோ, குறிப்பிட்ட காலத்துக்குள் நூறு பாடல்களை இயற்றத் தவறினாலோ தோற்றதாக அர்த்தம்.
இந்த நிபந்தனையை ஏற்று அம்பிகாபதி பாட ஆரம்பித்தான். சபையில் அரசன் உள்ளிட்ட பல அறிஞர்களுடன் கம்பரும், ஒட்டக்கூத்தரும் அமர்ந்திருந்தனர். அமராவதி ஒரு திரைமறைவில் அமர்ந்துகொண்டு நிகழ்ச்சியைக் காண அனுமதிக்கப்பட்டாள். அவள் நூறு மலர்களை ஒரு தட்டில் வைத்துக்கொண்டு அம்பிகாபதி பாடும் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு மலர் வீதம் அருகிலிருந்த மற்றொரு தட்டில் போட்டு, அம்பிகாபதி பாடும் பாடல்கலை எண்ணிக்கொண்டே வந்தாள்.
இவ்வாறு நூறாவது பாடலை எண்ணி முடித்ததும் வெற்றிக் களிப்பில் அமராவதி அம்பிகாபதி இருக்கும் இடத்தை நோக்கி வரவே, பேரழகுடன் விள்ங்கும் அவளைக் கண்டதும் அம்பிகாபதி தன்னை மறந்து,
சற்றே பருத்த தனமே துவளத் தரள வடந்
துற்றே அசையக் குழையூசலாட - துவர்கொள் செவ்வாய்
நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே
என்று காமரசம் ததும்பும் பாடலொன்றைக் கூறிவிட்டான். அவன் நூறு செய்யுட்களைப் பாடியிருந்தாலும் அவற்றுள் முதல் செய்யுள் காப்புச் செய்யுளாதலால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. ஆகவே அம்பிகாபதி மொத்தம் பாடிய பாடல்கள் 99 மட்டுமே. அமராவதி இதையறியாமல் அவசரப்பட்டுவிட்டாள். ஒட்டக்கூத்தர் இதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். அம்பிகாபதிக்கு மரணதண்டனை தரப்பட்டது. உணர்ச்சி வேகம் அறிவை மழுங்கச் செய்ததனால் வந்த விபரீதத்தின் பலனை அமராவதி அனுபவித்தாள்.
Labels: புலமைக்குச் சோதனை